தொடர் 17

யார் இந்த இப்லீஸ் ?     எங்கிருந்து வந்தான் ?    எதற்காக வந்தான்?

இப்லீஸே ஸுஜூது  செய்பவர்களுடன் நீ ஆகாமல் இருப்பதற்கு உனக்கு என்ன வந்தது?

(குர்ஆன் 15:32)

“நான் உனக்குக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது என்று அவன் (அல்லாஹ்) கேட்டான்…

(குர்ஆன் 7:12)

அல்லாஹ்வின் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். அவன் ஸுஜூது செய்யக் கூறியது மலக்குகளிடம் மட்டுமே. இப்லீஸிடம் ஆதமிற்கு ஸுஜூது செய்யக் கூறப்படவே இல்லை ஏனென்றால் அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்.

          அவன் வானவர்களுடனே இருந்து வந்ததால், ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸும் வானவர்களில் ஒருவனாகக் கருதப்பட்டு விட்டான் எனவே அல்லாஹ்வின் கட்டளை அவனுக்கும் பெருந்தக்கூடியதுதான் என்று மார்க்க அறிஞர்கள் “சப்பைக்கட்டு” கட்டுகின்றனர். தன்னை ஒரு வானவராக கற்பனை செய்து கொள்வதற்கு இப்லீஸிற்கு எந்தத் தடையையும் இல்லை. ஆனால் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அல்லாஹ்வை, இப்லீஸை அல்ல!

 மலக்குகளின் தன்மையும் ஜின்களின் தன்மையும் முற்றிலும் வெவ்வேறானவைகள் என்கிறது குர்ஆன். தான் படைத்த படைப்பினத்தின் வேறுபாடுகளைக்கூட அல்லாஹ்வால் அறிந்து கொள்ள முடியவில்லையா?

                    யானைகளின் கூட்டத்தில் வளர்க்கப்பட்ட பன்றியை, யானை என்று கூறுவதில் தவறில்லை என்கிறார்கள்.

சரி நான் விவாதத்தை தொடர்கிறேன்

                ஆதமிற்கு, இப்லீஸ் ஸுஜுது செய்ய மறுப்பதும், அதற்கான காரணமும் அல்லாஹ்விற்கு முன்பே தெரியவில்லை என்பது மிகப்பெரிய வேடிக்கை. அதை அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

“மனிதனுக்கு ஓசை தரக் கூடிய, மாற்றத்திற்குரிய கருப்புக் களிமண்ணால் அவனை நீ படைத்திருக்க -நான் ஸுஜூது செய்பவனாக இருப்பதற்கில்லை”

(குர்ஆன் 15:33)

அல்லாஹ், தன்னைத்தவிர யாருக்கும், எதற்கும் தலைவணங்கி ஸுஜூது செய்யக் கூடாது என்று மனிதர்களிடம் வற்புறுத்திக் கூறுகிறான். ஆனால் மலக்குகளை ஆதமிற்கு ஸுஜூது செய்யச் சொல்கிறான். இது மிகவும் முரண்பட்ட நிலைப்பாடு. அப்படி ஒரு ஆணை இடப்பட்டதற்கான காரணம் என்ன? (ஷிர்க் எனப்படும்  இணைவைத்தலைத் துவக்கி வைத்ததே அல்லாஹ்தான்!)

                    மலக்குகளை விட மனிதன் உயர்ந்தவன் என்றாலோ  அல்லது மலக்குகள் ஸுஜூது செய்யுமளவிற்கு மனிதன் தகுதியானவன் என்றாலோ இன்றும் மனிதர்களுக்கு ஸுஜூது செய்து பணிவிடைகள் செய்ய மலக்குகளைப் பணித்திருப்பான். எனவே மலக்குகளை ஆதமிற்கு ஸுஜூது செய்யப் பணித்ததின் நோக்கம்,

                    மலக்குகளை இழிவுபடுத்தி தண்டிப்பது மட்டுமே! அதனால்தான் இவ்விடத்தில் இப்லீஸ் தகுதியைப் பற்றி பேசுகிறான்.

                    மலக்குகள்  துடுக்குத்தனமாக பதிலளித்து மாட்டிக் கொண்டனர்.     சரி… இப்லீஸ் என்ன செய்தான்?  இந்தக்  குழப்பத்தில் இப்லீஸ் எப்படி நுழைந்தான்?

                    இந்த தண்டனை தனக்குப் பொருந்ததென்று இப்லீஸ் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறதே? எனவேதான் நான் ஆதமைவிட நான் உயர்ந்தவன் என்ற பதிலைக் கூறுகிறான். இருப்பினும் அல்லாஹ், இப்லீஸை தண்டிக்கவில்லை. இங்கிருந்து வெளியேறி விடவேண்டுமென உத்தரவிடுகிறான். அவனுக்கு அவகாசமும் அளிக்கிறான். இந்த அவகாசம் முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை நீண்ட அவகாசம் தற்பெருமையை திருத்திக் கொள்வதற்கு அல்ல. மேலும் தவறுகள் செய்து மனிதர்களை வழி கெடுப்பதற்காகத்தான். ஆனால் இப்லீஸ் வெளியேறாமல் சொர்க்கத்தின் தோட்டங்களில் நுழைந்து திரிகிறான். அல்லாஹ்வும் இப்லீஸைத் தடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை !

அல்லாஹ், ஆதாமிடம் கூறியதை நினைவு கூறுங்கள்,

“சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்”

 “நீர் பசியில்லாதிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் இதில் உண்டு.”

“இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”

சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.

(குர்ஆன் 2:35, 7:19, 20: 118 – 123)

                இப்லீஸ்ன் மோசடியால் மீறினர், விளைவு அவர்களது வெட்கத்தலங்கள் வெளியாயின. இதன் விளைவு காமம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனிதர்களின் பெருக்கம், குழப்பம். ஆதம் தம்பதியருக்கு  தடைசெய்யப்பட்ட பழத்தைச் சுவைக்கும் வரையிலும் தங்களது ஆடையற்ற நிலையைப்பற்றி எதும் தெரியவில்லையென்பது குர்ஆன் நமக்குத் தெரிவிக்கும் தெளிவான செய்தி. அவர்களுக்கு எதுவுமே தெரியாது பொருட்களின் பெயர்களையும், மன்னிப்பு கோரும்விதம் கூட அல்லாஹ்தான் கற்றுக் கொடுக்கிறான். அல்லாஹ், ஆதமிற்கு விலங்குகளின் பெயர்களையோ, தாவர வகைகளின் பெயர்களையோ அல்லது இதர படைப்பினங்களின் பெயர்களையோ கற்றுக் கொடுக்கவில்லை. பிற்காலத்தில் பூமியில் மனிதர்கள் தங்களின் தேவைகளுக்கேற்ப உருவாக்கிக் கொண்ட பொருட்களின் பெயர்களையே கற்றுக் கொடுக்கிறான்.

                “ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்ற இப்லீஸின் கேள்வியை கூர்ந்து கவனியுங்கள். இப்லீஸ், ஆதமை சூழ்ச்சி செய்து ஏமாற்றினான் என்பது அல்லாஹ்வின் குற்றச்சாட்டு. உதாரணத்திற்கு நம்மை ஒருவர் சூழ்ச்சி செய்வதாகக் கொள்வோம். சூழ்ச்சி  செய்யக் கூடிய அந்த நபரின் தந்திர வார்த்தைகளை  நம் அறிவிற்கு எட்டிய வரை ஆய்வு  செய்து, அந்த செய்திகளை உண்மையென்று ஏற்றுக் கொண்ட பிறகே சூழ்ச்சிக்கு ஆளாகி பின்னர் வருந்துவோம். இங்கு சூழ்சிக்காரரின் வார்த்தைகளை நம்புதல் என்பது அவர் கூறும் செய்திகளை ஏதோ ஒருவிதத்தில் அது ஆய்வு செய்த பின்னரே நிகழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

                “ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்ற வார்த்தைகளில் மறைந்துள்ள  மரணத்தையும், ஆட்சி அதிகார வீழ்ச்சியைப் பற்றியும் ஆதமிற்கு எதுவும் தெரியாது அவருக்கு அதற்கான  அவசியமுமில்லை.

                செர்க்கத்தின் பூங்காவில் வசித்து வரும் ஆதம், தான் மரணமடைந்து விடுவோம் என்று எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு மரணத்தைப் பற்றியும், வீழ்ந்த  ஆட்சிகளைப் பற்றியும் எதுவும் தெரியாது. அல்லாஹ், ஆதம் தம்பதியருக்கு உணவுக் கட்டுப்பாட்டை மட்டுமே விதித்திருந்தான். உண்மை இப்படி இருக்கையில், அவருக்கு நித்திய வாழ்வும், வீழ்ந்து விடாத ஆட்சியின் அவசியம் என்ன? செர்க்கத்தில் ஒரு அழிந்து விடாத ஆட்சியை செலுத்த விரும்பினாரா? அப்படி ஒரு ஆட்சியை நிறுவினாலும் அவர் ஆளப்போவது யாரை?

குர்ஆனின் செய்திகளின்படி, அந்த நேரத்தில் ஆதமிற்குத் தெரிந்தது தன்னைப் படைத்த அல்லாஹ், தன்னை ஸுஜூது செய்த மலக்குகள், தனது விலா எழும்பிலிருந்துப் படைக்கப்பட்ட தனது மனைவி, இறுதியாக ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் இப்லீஸ் மேலும் அல்லாஹ்வால் கற்றுத் தரப்பட்ட பொருட்களின் பெயர்கள். இதில் பொருட்கள் அஃறிணை அதை விட்டு விடலாம்.  ஆதமின் மனைவி அவருக்குக் கட்டுப்பட்டவர் அவரையும் விட்டு விடலாம். எஞ்சியிருப்பது அல்லாஹ், மலக்குகள் மற்றும் இப்லீஸ் இவர்களில் யார் மீது அழிந்து விடாத ஆட்சியைச் செலுத்த ஆதம் விரும்பினார்? ஒருவேளை ஆதம் இறந்தாலும் அதே இடத்திற்குத்தானே வரப் போகிறார்?

அல்லது

அல்லாஹ்வால் பூமியில் இறக்கி விடப்பட்டால் அங்கு நித்திய வாழ்வையும், அழிந்து விடாத ஆட்சியையும் நிறுவுவதற்கு தயாரகிக் கொண்டிருந்தாரா? பூமியின் வாழ்க்கையைப்பற்றி அவருக்கு அனுபவம் ஏதேனும் இருந்ததா? குர்ஆனின் விளக்கங்கள் முட்டாள்த் தனமாகத் தெரியவில்லையா?

தடைசெய்யப்பட்ட பழத்தைச் சுவைக்கும் வரை அல்லாஹ் எங்கே போயிருந்தான்? அவர்கள் இருவரும் பழத்தை சுவைத்து தங்களது வெட்கத் தலங்களை அறிந்து கொள்ளும் வரை அல்லாஹ் வரவில்லை. பிறகு அவர்களைப் பார்த்து, “ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க பகைவனென்று முன்னமே உங்களிடம்  சொல்லவில்லையா?” என்று கேட்கிறான்.

                ஆதம் ஒரு அறிவுக் குருடர். குர்ஆனின் தகவல்களின் படி ஆதம் ஒரு குழந்தையல்ல! முழு வளர்ச்சியடைந் ஒரு ஆண். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அறுபது முழ உயரம் கொண்ட  அறிவில்லா ஆண் (பூதம்?). இப்லீஸைப் பற்றியும், அவனால் நிகழவிருக்கும் ஆபத்துக்களைப்பற்றியும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அல்லாஹ்வின் ஆணையை ஏற்க மறுத்து இப்லீஸ் எதிர்வாதம் புரிந்து கொண்டிருந்த பொழுது, பிரச்சினையின் மூல காரணமாக இருந்த ஆதம், அப்பொழுது அங்கிருந்த போதும், தனது எதிரியான இப்லீஸை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.  ஆதம், இப்லீஸைப்பற்றி அறிந்து கொண்டவராக இருப்பின் நித்திய வாழ்வையும், வீழ்ந்து விடாத ஆட்சியின் மகத்துவத்தைப் பற்றியும் இப்லீஸ் கூறும் பொழுது எச்சரிக்கையடைந்திருப்பார். ஆதம் தம்பதிகள் இப்லீஸைத் தங்களது இரு கண்களால் கண்டதாக் குர்ஆனும் கூறவில்லை.  இத்தகையதொரு அறிவுக் குருடரிடம் “ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க பகைவனென்று முன்னமே உங்களிடம்  சொல்லவில்லையா?” என்று கேட்பதின் பயன் என்ன?

பிறகு, ஆதம் தன் தவறை உணர்ந்ததாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் அதை மனப்பூர்வமான உணர்வை அல்லாஹ் ஏற்கவில்லை. மன்னிப்புக் கேட்பதற்கு என்னென்ன வார்த்தைகளை எப்படி உபயோகிக் வேண்டும் என்று தனது பயிற்சி வகுப்பை மீண்டும் துவக்குகிறான். ஆதம் கற்றுத் தேர்ந்த பின்னர் அல்லாஹ்வால் கற்றுத் தரப்பட்ட மன்னிப்புரையை அல்லாஹ்விடம் வாசித்துக் காண்பிக்கிறார். அல்லாஹ், ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் தண்டனையை ரத்து செய்ய விரும்பவில்லை. ஆதம் தம்பதியரைத் தண்டிப்பதையே அவனது மனதிற்கு அழகாகத் தோன்றியது.

அல்லாஹ்விற்கு இப்லீஸைத் தண்டிப்பதற்கும், நேர் வழிப்படுத்துவதற்கும் ஏனோ விருப்பமில்லாமல் போனது. மாறாக ஆதமின் சந்ததிகளை வழிகெடுக்க அனுமதியையும், ஆதிகாரத்தையும், சக்தியையும் இப்லீஸிற்கு வழங்கி, அதற்குத் தேவையான கால அவகாசத்தை அளவில்லாமல் வழங்குகிறான்.

                இன்னொரு குழப்பம். ஆதம் முதலில் மன்னிப்பு கேட்ட பொழுது அல்லாஹ் அதை ஏற்கவில்லை. செய்வதறியது திகைத்த ஆதம் வேறொரு யுக்தியை செயல்படுத்துகிறார். மறுமுறை அல்லாஹ்வை மன்னிப்பை கேட்டு பிரார்த்திக்கும் பொழுது “முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் மன்னிக்க வேண்டுமெனகேட்க அல்லாஹ்வும் ஆதம் (அலை) அவர்களைப் பொருந்திக் கொள்கிறான்.

பிறகு அல்லாஹ் ஆதமை நோக்கி, “உங்களுக்கு முஹம்மதை எப்படி தெரியும்?” என்று கேட்கிறான். அதற்கு ஆதம்,  “நான் சொர்கத்திலிருந்த பொழுது உன்னுடைய அர்ஷ்ல் லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹி என எழுதியிருந்ததைக் கண்டேன். எனவே முஹம்மது உனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும் என நினைத்து அவர் பொருட்டால் மன்னிக்க  கோரினேன் என்றார்.

அல்லாஹ் முதலில் படைத்த மனிதன் ஆதம் (அலை) அவர்களை ஆனால் முதலில் படைத்த ரூஹ் முஹம்மது நபி அவர்களுடையது என்று பல மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறேன். அந்த ஒளியானது (உயிர்) ஆதம் (அலை) அவர்களிடமிருந்து  பயணத்தை துவங்கி ஒவ்வொரு நபியின் முதுகந்தண்டுகளில் பாதுகாக்கப்பட்டு இறுதியாக முஹம்மது நபி அவர்களின் தந்தையார் அப்துல்லா அவர்களை வந்தடைந்தது. அந்த ஒளி அப்துல்லா அவர்களின் முகத்தில் பிரகாசித்தது  எனவே பல பெண்கள் அப்துல்லா அவர்களை திருமணம் செய்ய போட்டியிட்டனர். ஆமீனா அவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது என்கின்றனர்.

சிலர் இது ஆதாரமற்ற செய்தி என்கின்றனர் பர்னபாஸ் சுவிசேஷம் கூட அல்லாஹ்வின் அர்ஷில் பிரகாஷமான எழுத்துக்களைக் கண்டதாகவும் அதன் பொருள் இன்றுள்ள கலீமாவை பிரதிபளிப்பதாகவும் கூறுகிறது .

ஆதாமை, அல்லாஹ் தன்னுடைய இரு கைகளால் உருவாக்கிக் கொண்டிருந்த பொழுது தானும் அங்கே இருந்ததாக முஹம்மது நபி கூறியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

Hadith Qudsi-ல் முஹம்மது நபி கூறுகிறார், உம்மைப் படைக்கவில்லையென்றால் இப்பிரபஞ்சத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாகக் கூறுகிறார்.

(Were it not for you, I would not have created the universe -Hadith Qudsi)

The very first thing that Allah Almighty ever created was my soul.”

“First of all things, the Lord created was my mind.”

இப்பொழுது திரைவிலகிவிட்டது. நமக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவேளை, ஆதம் தம்பதிகளும், இப்லீஸும் அல்லாஹ்வின் ஆணைகளுக்கு அடிபணிந்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டிருந்தால் ஆதமைப் படைப்பதற்கு முன்பே படைக்கப்பட்ட வானங்களும், பூமிகளும் சொர்க்கங்களும் நரகங்களும் குறிப்பாக சொல்வதென்றால் முஹம்மது நபியின் ரூஹ், மற்றுமுள்ள ஒரே தவனையில் படைக்கப்பட்ட இதர  படைப்பினங்களின் உயிர்களை என்ன செய்வது? ஆதம் சொர்கத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் முஹம்மது நபியின் மகத்தான சேவைகளை மனிதகுலம் எப்படி அடைய முடியும்?

                எனவே இந்த நாடகத்தின் மூலம், அல்லாஹ்வுடைய பிரம்மாண்ட திட்டத்தின் முதல் பகுதி நிறைவேறியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த திட்டத்தில் ஆதமும், இப்லீஸும் அல்லாஹ்வின் கருவிகளே என்பதை எளிதாக அறியலாம்.

மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.

பிறகு அவனைக் கீழானவர்களிலும் மிக கீழானவனாய் நாம் ஆக்கினோம்.

(குர்ஆன்   95: 4-5)

ஆதம் தம்பதியருக்கு  சொர்கம் தற்காலிகமே ! பூமியே மனிதர்களுக்கான இருப்பிடம் என்பதை  குர்ஆன்   2:30 வசனம் தெளிவாக உணர்த்துகிறது.  மனிதர்களை பூமியில் படைப்பது மட்டுமல்லாமல் அவனது  மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் அல்லாஹ்வின்  நாட்டமே  என்பதை விதியைப்பற்றி கூறம் குர்ஆன்  வசனங்கள் 2:6-7, 2:272, 4:78, 6:9, 6:35, 6:126, 7:179, 13:33, 16:93, 10:35, 10:100,11:118, 11:119, 14:4, 32:13, 35:8, 36:7, 47:23, 76:30 மிகத் தெளிவாக உறுதி செய்கிறது. (விதியின் விளையாட்டை அடுத்துவரும் தலைப்புகளிலும் காணலாம்).

புஹாரி  ஹதீஸ் : 6614             

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் ஆதம் அவர்களே, எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள், சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூசாவே, அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான், அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் வித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள், தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான்.

நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

                இங்கு ஒரு ஹதீஸ் படைப்பினத்தின் விதி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டதாகவும், மற்றொன்று ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து விதிகளையும் தீர்மானித்துவிட்டதாக கூறுகிறது இவையிரண்டுமே மிக நம்பகமான ஹதீஸ்களே. நாற்பது ஆண்டோ  அல்லது ஐம்பதாயிரம் ஆண்டோ படைப்பினங்கள் விதியுடன்தான் படைக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே, ஆதம் (அலை) அவர்களின் தவறு ஏதுமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் மிகத் தெளிவாக  விளக்குகிறது. இப்லீஸ் தற்பெருமை கூறி அல்லாஹ்வின் ஆணையை ஏற்கவில்லை என்றும், மனிதனின் மீது இப்லீஸ் கொண்ட கோபத்தின் காரணமாக,  அவன் (இப்லீஸ்) செய்த சூழ்ச்சியாலே மனிதன் இழிநிலையடைந்தான் என்று குறை கூறுவது அல்லாஹ்  தன்னைதானே குறை கூறுவதாகவே  பொருள் விளங்குகிறது. ஆதமை படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வால் இறுதி செய்யப்பட்ட விதியின் பயனால் விளைந்தவைகளுக்காக, ஆதாம் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்?

இப்லீஸா?  அல்லாஹ்வா?  நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் .

1 thoughts on “ஆரம்பத்தைநோக்கி – தொடர் 17

பின்னூட்டமொன்றை இடுக