
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி - சென்னை
அந்திசாயும் அந்த மாலைப் பொழுதில் புதுவை நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மாலை நேரம் தொடங்கிவிட்டாலே புதுவையின் அனைத்து பார்களும் களைகட்டத் தொடங்கிவிடும். அரசியல்பிரமுகர்கள், ரௌடிகள், ஆலைத்தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வணிகர்கள், காவலர்கள், லும்பன்கள் என அனைத்து மட்டத்தினரும் சங்கமிக்கும் இடம் இதுதான். புதுவையின் அரசியலே இங்குதான் தீர்மானிக்கப்படுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் கொஞ்ச நாட்களாகவே புதுவைத் தொழிலாளர்கள் சிகப்பை நோக்கிச் செல்வதை உணரமுடிகிறது. புஜதொமுவின் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொள்வது இதை மெய்பிப்பதாக இருக்கிறது.. மக்கள் தங்களது தேவைகளுக்காக, கோரிக்கைகளுக்காக சம்பிரதாயமாக வழிபாட்டுத்தளங்களுக்குச் சென்றாலும் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வீதிக்குத் வந்து தானே தீரவேண்டியிருக்கிறது.
நானும் அந்த மாலைப்பொழுதில் எனது பணியை இடைநிறுத்திவிட்டு HUL நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்ல ஆயுத்தமானேன். நிர்வாகம் என்றாலே அடக்குமுறையும் இருக்கும்தான் போலும். முன்பொருமுறை இந்த நிறுவனம், கேண்டீனில் வழங்கப்பட்ட இட்லி சரியில்லை என்பதனை எதிர்த்து போராடிய தோழர். முத்துகிருஷ்ணனை பணிநீக்கம் செய்திருந்தது. 2 ரூபாய் இட்லிக்காக பணிநீக்கம் செய்த நிர்வாகம் ஊதிய உயர்வை வழங்கு என்றால் சும்மா இருக்குமா! 7 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்தது. விளைவு ஆர்ப்பாட்டம், போராட்டம் என நிர்வாகத்திற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தோழர் கலிவரதன் (எ) கலையின் ஆவேசப்பேச்சு எதிரொலித்துக் கொண்டிருந்தது. கடந்த மாதம் 23 ம்தேதி HUL நிர்வாகத்திற்கெதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமி விமர்சிக்கப்பட்டமைக்கு அவரது அடிப்பொடி ஒருவன் தொலைபேசி மிரட்டல் விடுத்திருந்தான் அதற்கு சவால் விடும் விதமாகத்தான் இவரும் பேசிக்கொண்டிருந்தார். ரங்கசாமி புதுவையின் முதல்வராக பொறுப்பேற்ற இந்த ஆறு மாத கால சாதனைகளை புள்ளி விவரமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால் அது தினம் ஒரு கொலை என்பதாகத்தான் இருக்கும். இந்த புள்ளி விவரம் கொடுத்த தெம்பில்தான் அவனும் மிரட்டல் விடுத்திருப்பான் போலும்.
இப்பொதுகூட்டம் நடைபெற்ற இடம் சிங்காரவேலர் சிலை அருகே அமைந்த பெரியார் திடல். இதே இடத்தில்தான் கடந்த 2010 மே 1 அன்று மேதினப் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்ததை தடைசெய்திருந்தது இந்திய ஆளும் அதிகார வர்க்கம். அதனைத் தொடர்ந்து புதுவைப் பேரூந்து நிலையம் முன்பாக போராட்ட உணர்வுடன் நடத்தி முடிக்கப்பட்ட மறியல் போராட்டத்தில் புதுவை போலீஸை சிரிப்புப் போலீசாக மாற்றிய பறையின் ஒலியும் விசில் சத்தமும் இன்னமும் புதுவைப்

கூட்டத்தின் ஒரு பகுதியினர்
பிரதேச அதிகாரவர்க்கதை தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது என்பதனை இப்பொதுகூட்டத்திற்கு அனுமதியளிப்பதிலும் அவர்களின் அணுகுமுறை பிரதிபலித்தது. நிச்சயமாக இப்பொதுகூட்டமும் அவர்களிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும். என்பதை கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய 1000 பேர்களின் தலைகள் உறுதிசெய்தன. அதில் HUL ஆலையின் தொழிலாளர்களில் சிலர் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தோழர் கலையின் HUL நிர்வாகத்திற்கு எதிரான கண்டன உரைக்கு பின்னர் தமிழ் மாநில புஜதொமு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, 3 பழமொழிகளை இடையிடையே எடுத்துக்காட்டுகளாகக் கூறி தொழிலாளர்களுக்காக நீதிமன்றத்தில் தான் பங்குகொண்ட வழக்குகளின் அனுபவங்களிலிருந்து மிகச் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். அதை இங்கு பகிர்ந்து கொள்வதென்பது நீதிமன்ற போதையில் இருக்கும் பலருக்கு முக்கியமானதாக இருக்கும் என கருதுகிறேன். அதன் சாரம் வருமாறு.
1947ல் இந்திய அரசு உருவாக்கியிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் என்பது விளக்கு மாத்துக்கு பட்டுக் குஞ்சம் போன்றது. தொழிலாளிகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களை தொழிலாளர் நலச் சட்டங்கள் என்கின்றனர். நண்டு வறுத்து நரியை காவலுக்கு வைக்காதே என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதில் நரிதான் தொழிலாளர் துறை ஆணையர். தொழிலாளர் ஏதேனும் ஆலை பிரச்சினை சம்பந்தமாக ஆணையரிடம் மனு கொடுக்கச் சென்றால் மனுவை வாங்கி வைத்துவிட்டு முதல் வேலையாக முதலாளியைத் தொடர்புகொண்டு என்ன செய்யலாம் என்றுதான் கேட்பார். இதுதான் தொழிலாளர் நல ஆணையரின் வேலையாக இருக்கிறது.

புஜதொமு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி
பாதிக்கப்படும் தொழிலாளர்கள் முதலில் தொழிலாளர் துறை உதவி ஆணையரிடம் மனு கொடுக்க வேண்டும், அவர் இரு தரப்பையும் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துவார். பல மாதம் கூட பேசுவார். இவ்வாறாக பேசி முடித்த பிறகு இதெல்லாம் இங்கு பேச முடியலைங்க அப்படின்னு ஒரு அறிக்கை கொடுப்பார். அந்த அறிக்கையை வாங்கிக்கொண்டுதான் தொழிலாளிகள், தொழிலாளர் நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியும். ஆனால் முதலாளியோ ஆரம்பகட்ட நிலையிலேயே எந்த கோர்ட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆலையில் பிரச்சினை என்று வந்தவுடன் உடனடியாக Injection order யை முதலாளியால் வாங்கிக் கொள்ள முடியும். இது இரு முரண்பற்ற வர்க்கங்களில் முதலாளி வர்க்கத்திற்கு அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சலுகை.. மேலும், தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று முடிய 15 வருடங்கள் ஆகலாம். இப்படியாக வழக்கு முடிவதற்குள் போதுமடா சாமி, முதலாளி கொடுத்த பணத்தையே வாங்கியிருக்கலாம் என்ற நிலைக்கு ஒரு தொழிலாளி வந்துவிடுவார். சட்டத்தை நம்பி நீதிமன்ற படியேறிய பல தொழிலாளர்களின் அனுபவம் இதுவாகத்தான் இருக்கும். நீதிமன்றங்களை நம்புவது என்பது வீணான வேலை. தீர்ப்பு கூறும் நீதிபதி நேர்மையானவரா மோசமானவரா என்பதல்ல பிரச்சினை. அறுக்கத் தெரியாதவன் இடுப்புல அம்பெத்தெட்டு பன்னருவாள் என்ற பழமொழி மாதிரிதான் இந்த சட்டங்கள். இருக்கின்ற இந்த சட்டங்களை வைத்து நீதிபதியால் அதுதான் செய்ய முடியும். தொழிலாளிகள் தங்களது கோரிக்கையை வென்றெடுக்க மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும். அவர்கள் நீதிமன்றங்களை நம்பாமல் போர்க்குணத்துடன் ஒற்றுமையுடன் போராடினர். வெற்றியும் பெற்றனர்.. தாங்கவே முடியாத வலிக்கு ஒரு வலிநிவாரணி மருந்து போடுவது போன்றதுதான் நீதிமன்றங்கள். காலம் முழுதும் வலி நிவாரணியையே பயன்படுத்த முடியாது தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வைத் தருவது அவர்களது போராட்டங்கள் தானே தவிர நீதிமன்றங்கள் அல்ல.
இறுதியாக, 100 வருடங்களுக்கு முன்னதாக இந்ங்கிலாந்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. தனது சக சுரங்கத்தொழிலாளி இறந்துவிட்ட காரணத்தினால். அவரது இறுதி சடங்கிற்குச் செல்ல தொழிலாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் முதலாளி 8மணிநேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் விடுமுறை அளிக்க முடியாது என மறுத்து விட்டான். எனவே, அடுத்த நாள் காலை 1 மணிநேரம் முன்னதாக வேலைக்கு வந்து மாலை 1 மணிநேரம் முன்னதாக வேலையை முடித்துவிட்டு சென்றுவிடலாம் என தொழிலாளர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்கும் முதலாளி மறுத்துவிட, முதலாளியையும் மீறி இறுதிச் சடங்கிற்கு சென்றுவிடுகின்றனர். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார் யார் என உளவு பார்க்கிறது நிர்வாகம். இதனை அறிந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை ஆலையின் வாயிலில், ’தொழிலாளியின் இறப்பிற்கு சென்ற தொழிலாளர்கள்’ என தலைப்பிட்டு ஒட்டி, உன்னால் முடிந்ததை செய்து கொள் என கோஷமிட்டனர். தோழர்களே இது போன்ற சுயமரியாதை உணர்வும், கோபமும்தான் அடக்குமுறையிலிருந்து தொழிலாளர்களை விடுதலை செய்யும். என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து, புஜதொமு தமிழமாநில பொதுசெயலாளர் சுப.தங்கராசு, தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை ஊதிய உயர்வு எனற கோரிக்கையுடன் முடித்துக் கொள்ளாமல் முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற பிற போராட்டங்களிலும் திரளாக பங்கு கொள்ளவேண்டும். சமூக விடுதலைக்கான போராட்டங்களின் மூலம்தான் உண்மையான விடுதலையை சாதிக்கமுடியும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
தானே புயலினால் விழுந்துவிட்ட மரங்களினாலும் உதிர்ந்துவிட்ட இலைகளினாலும் புதுவையின் பல பகுதிகள் வெளிச்சமாக தெரிவதைப்போல, புஜதொமுவின் ஆர்ப்பாட்டங்களாலும், போராட்டங்களாலும், இந்திய அரசின் வர்க்க முகம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
– கலை
தொடர்புள்ள பதிவு :
புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும்
Filed under: அரசியல்,கட்டுரைகள்,கம்யூனிசம்,நாட்டு நடப்புகள்,பொதுஉடமை,முதலாளித்துவம்,capitalism,communism,political | குறிச்சொற்கள்: அரசியல்,சமூகம்,பாண்டிச்சேரி,பார்த்தசாரதி,புமாஇமு,பொதுஉடமை,போராட்டம்,capitalism,communism,communist,HUL | 1 மறுமொழி »